Monday, December 14, 2009

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை

பீர்க்கங்காய்தோல்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 1 பல்
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
உப்பு

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும்.
  • வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
  • பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
  • கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
  • அனைத்தையும் சேர்த்து அத்துடன் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.

பீர்க்கங்காய் பொரியல்

தேவையானவை


பீர்க்கங்காய் - 2
வெங்காயம் - 1/2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு

செய்முறை
  • பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கி வைத்த பீர்க்கங்காயை சேர்த்து வதக்கவும்.
  • உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
  • காய் வெந்ததும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.



இந்த பொரியல் சாதத்துல பிசைஞ்சு சாப்பிடவும் நல்லா இருக்கும்.

Wednesday, November 25, 2009

ரசம் (புளி சேர்க்காத ரசம்)

இந்த ரசத்தை எங்க வீட்ல செலவு ரசம்னு சொல்லுவாங்க. புளி சேர்க்காம செய்யற ரசம். சளி பிடிச்சிருந்தா எங்க அம்மா இந்த ரசம் வெச்சு குடிக்க சொல்லுவாங்க. எனக்கு பிடித்த ரசம் இது.



தேவையானவை



வெங்காயம் - சிறிது பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு
சீரகம்
உப்பு
எண்ணெய்



வதக்கி அரைக்க



சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 1
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

இது சூப் மாதிரி குடிக்கவும் நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம்.

இத்துடன் தூதுவளை இலை 4 அல்லது 5 சேர்த்து வதக்கி அரைத்து செய்யலாம்.

தூதுவளைப்பொடி 1 டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.

அரைக்கும் போது கொள்ளு 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

Monday, November 23, 2009

கீரை(Spinach) கடைசல்

தேவையானவை

ஸ்பினாச் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 2 பல் நறுக்கியது
எண்ணெய்
உப்பு


செய்முறை
  • கீரையை கழுவி சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக வைக்கவும். (தண்ணீர் மிகவும் குறைவாக வைக்கவும்.)
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • கீரையையும், வதக்கியவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (2 அல்லது 3 சுத்து விட்டால் போதும். ரொம்ப அரைக்க வேண்டாம்).

சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க சிறிது வெண்ணெய் சேர்த்து அரைத்து கொடுக்கலாம். என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தமானது இது. செய்வதற்கும் சுலபமானது.

Saturday, November 14, 2009

கம்பு தோசை

கம்பில் செய்யப்படும் உணவு வகைகள் கொங்கு பகுதியில் நிறைய உண்டு. இந்த தோசையும் அதில் ஒன்று. எங்க வீட்ல நான் சின்னதா இருக்கும் போது அடிக்கடி செய்வாங்க. அப்பல்லாம் எனக்கு பிடிக்காது. இப்ப அம்மாகிட்ட கேட்டு ஒவ்வொண்ணா செஞ்சுட்டிருக்கிறேன்.



தேவையானவை


கம்பு - 2 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

செய்முறை

  • கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நன்கு ஊறியதும், அதை கழுவி கிரைண்டரில் அரைக்கவும்.
  • பாதி அரையும் போது, அத்துடன், மிளகாய், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து உப்பு கலந்து வைக்கவும்.
  • நன்கு புளித்ததும், மெல்லிசான தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம். தக்காளிச்சட்னி அல்லது தேங்காய் சட்னியுடனும் நல்லா இருக்கும்.

Friday, November 13, 2009

பிடித்தது பிடிக்காதது தொடர்

இதுவரைக்கும் சமையல் குறிப்பு தவிர பெருசா எதுவும் எழுதினதில்லை. இப்ப பித்தனின் வாக்கு சுதாகர் அண்ணன் இதுல இழுத்து விட்டுட்டாங்க.

1 .அரசியல் தலைவர்
பிடித்தவர் : வைக்கோ (ஜெயலலிதாவோட கூட்டு சேர்ரதுக்கு முன்னால வரைக்கும்)
பிடிக்காதவர் : கலைஞர், ஜெயலலிதா ( இப்ப இருக்கர எல்லோரும்)

2. எழுத்தாளர்

பிடித்தவர் : கல்கி, சுஜாதா, நாபா, புதுமைப்பித்தன், இந்துமதி, சிவசங்கரி
பிடிக்காதவர் : ரமணி சந்திரன்


3. பாடலாசிரியர்
பிடித்தவர் : வைரமுத்து, தாமரை, வாலி
பிடிக்காதவர் : பேரரசு


4. இயக்குனர்
பிடித்தவர் : மணி ரத்னம், சேரன்(இயக்குனராக மட்டும்), கமல்
பிடிக்காதவர் : எஸ். ஜே சூர்யா, பேரரசு


5. நடிகர்
பிடித்தவர் : பிரகாஷ்ராஜ், கமல், விக்ரம், சூர்யா.
பிடிக்காதவர் : விஜய்


6. இசையமைப்பாளர்

பிடித்தவர் : ஏ. ஆர் ரஹ்மான், இளையராஜா
பிடிக்காதவர் : தேவா


7.பேச்சாளர்

பிடித்தவர்: சாலமன் பாப்பையா
பிடிக்காதர்: விஜய டிராஜேந்தர்


8. விளையாட்டு
பிடித்தது : வாலிபால், கிரிக்கட், டென்னிஸ் (எல்லா விளையாட்டும்)
பிடிக்காதது : WWF(அது விளையாட்டுல வருமா?)


சமையல விட்டுட்டா எப்படி

8. சமையல்
பிடித்தது : எங்க அம்மா சமைக்கிற எல்லாமும்
பிடிக்காதது : அசைவ உணவுகள்


நம்ம யாரையாவது எழுத சொல்லனுமில்ல (அப்பதானே தொடர் பதிவு)

விவசாயி இளா
கீதா ஆச்சல்
ஹர்ஷினிஅம்மா

Monday, November 2, 2009

காளான் பிரியாணி

தேவையானவை


பாஸ்மதி அரிசி - 3 கப்
காளான் - 2 கப்
oyster mushroom - 1 கப்
(நம்ம ஊர்ல கிடைக்கிற சிப்பிக்காளான் மாதிரி இருக்கும்)
வெங்காயம் - 2 மெலிதாக நறுக்கியது
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லிதழை - சிறிது
புதினா - 1 கப்(நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்



அரைக்க

இஞ்சி - 10 சிறிய துண்டுகள்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 4
பட்டை - 2 துண்டு
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 5
(சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.)

தாளிக்க

பிரியாணி இலை - சிறிது
மராட்டி மொக்கு
கடல்பாசி
ரோஜா மொக்கு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஜாதிக்காய் - சிறிது துறுவியது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது

செய்முறை
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு என்னெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • காளானை சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அதில் புதினா மற்றும் மல்லிதழை சேர்த்து கலக்கவும்.
  • 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடிவைத்து விசில் போடவும்.

  • 1 விசில் வந்ததும் சிறு தீயில் 5 நிமிடம் விட்டு இறக்கவும்.
    தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். எங்க வீட்ல அனைவருக்கும் பிடித்த உணவு இது. இதுல நீங்க காரம் இன்னும் கூட சேர்க்கலாம். கிராம்பு அரைக்க சேர்க்காம தாளிக்க சேர்க்கறதால அந்த காரம் குறையும். இது வெறும் oyster mushroom ல பண்ணினாலும் நல்லா இருக்கும்.

Wednesday, October 28, 2009

பாசிப்பயறும் பூசணிக்காயும்

தேவையானவை

பாசிப்பயறு - 1 கப்
பூசணிக்காய் - 1 கீத்து (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 8 ((நீள வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • பாசிப்பயறை குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மல்லி தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் பூசணிக்காயை சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
  • பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த பாசிப்பயறை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நல்லா இருக்கும்.

Thursday, October 22, 2009

காளிஃப்ளவர் குருமா

தேவையானவை

காளிஃப்ளவர் - 1 (சிறிய பூக்களாக நறுக்கவும்)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)(optional)
கறிவேப்பிலை
கடுகு
உப்பு
எண்ணெய்

அரைக்க


தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 10
வறுகடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கசகசா - 1 டீஸ்பூன்
(நன்கு அரைத்துக்கொள்ளவும்)


செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளிஃப்ளவரை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • காளிஃப்ளவர் வெந்ததும், அரைத்த விழுதை சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் உப்புமாவுக்கும் நல்ல combination. இது வெள்ளைக் குருமான்னும் சொல்லுவாங்க. காய் எதுவும் இல்லேன்னா கூட வெறும் வெங்காயம் தக்காளில செஞ்சாலும் நல்லா இருக்கும்.

Tuesday, October 20, 2009

கீரை பொரியல்

தேவையானவை

கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
கறிவேப்பிலை
கடலைப்பருப்பு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது

செய்முறை

  • கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.
  • வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேக விடவும்.
  • நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். இது Amarnath leaves . இந்த கீரைக்கு தமிழ்ழ என்ன பேர்னு தெரியாது. நம்ம ஊர் தண்டங்கீரை மாதிரியே இருக்கும்.

Friday, October 16, 2009

மைசூர்பாக்

இதுக்கு ஏன் இந்த பேர்னு தெரியல. ஒரு வேளை மைசூர்லதான் மொதல்ல செஞ்சிருப்பாங்களோ? :-).


தேவையானவை


கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
எண்ணெய் - 3 கப்
நெய் - 1 கப்




செய்முறை

  • ஒரு நான் ஸ்டிக் கடாயில் (செய்யறதுக்கு ஈசி) சர்க்கரை போட்டு, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • அது கொதிக்கும் நேரத்தில் கடலை மாவில் எண்ணெய் விட்டு கரைத்து வைக்கவும்.
  • சர்க்கரை பாகு ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும். (பக்கத்தில் கணவர் இருந்தால் வசதி :-) )
  • சிறிது சிறிதாக எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
  • சிறிது நேரத்தில் எண்ணெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது எண்ணெய் சேர்ப்பதை நிறுத்தி விடலாம்.

  • கிளறும் போதே நன்கு பொற பொறவென பொங்கி வரும் போது எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.
  • ஓரளவு ஆறியதும் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளவும்.


கடலை மாவைக்கரைத்து செய்வதால், கட்டி தட்டாமல் வரும்.இது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் போலவே இருக்கும்.
Thanks to Govind அவருதான் கிளறினாரு.


அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, October 15, 2009

முறுக்கு

தேவையானவை

புழுங்கல் அரிசி - 4 கப்
பொட்டுகடலை மாவு - 3/4 கப்
கடலை மாவு - 1/4 கப்
உளுந்து மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 6
பூண்டு -10 பல்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை

அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து அத்துடன் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும்.
அத்துடன் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய் ஓமம் சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறு சிறு தட்டுகளில் பிழிந்து வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பிழிந்து வைத்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
எல்லா மாவையும் இதேபோல் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

பருப்பு சாதம் (தட்டைப்பருப்பு)

தேவையானவை

அரிசி(சோனா மசூரி) - 2 கப்
தட்டைப்பருப்பு(காராமணி உடைத்தது) - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
  • அரிசி, பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், அரிசி பருப்பு சேர்த்து கலந்து, 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
  • ஒரு விசில் வந்ததும், சிறு தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

இது கொங்கு நாட்டு பகுதியில் அதிகம் செய்யப்படும் உணவு. புளிக்குழம்புடன் சாப்பிட நல்லா இருக்கும்.ஊறுகாயுடனும் சாப்பிடலாம். வேலை நிறைய(தீபாவளி பலகாரம் செய்யறது) இருக்கறப்போ சீக்கிரமா சாப்பாடு செய்யனும்னா இந்த மாதிரி பருப்பு சாதம் வகைகள் எளிதாக செய்து விடலாம்.

Tuesday, October 13, 2009

சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)

தேவையானவை
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு

முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்
பீன்ஸ்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)
தாளிக்க

வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)


செய்முறை
  • அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும்.
  • அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும்.
  • கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும்.
அப்பளம் அல்லது சிப்ஸ் நல்ல combination.

இது செய்வதற்கு சுலபமானது. சுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும்.எல்லா காய்களும் சேர்க்கலாம்.

Saturday, October 10, 2009

பலாப்பழ ஹல்வா

தேவையானவை


பலாச்சுளை - 20
சர்க்கரை - 1 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10


செய்முறை

  • பலாச்சுளைகளை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
  • நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
  • அதே கடாயில் பழக்கூழை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.(அரைத்த பழக்கூழ் 1 1/2 கப்புக்கு 1 கப் சர்க்கரை சேர்க்கவேண்டும்)
  • கடைசியில் வறுத்து வைத்த முந்திரி கலக்கவும்.


செய்வதற்கும் எளிது. சுவையாகவும் இருக்கும். இது டின் பலாப்பழத்தில் செய்தது.

Monday, October 5, 2009

பூசணி ஹல்வா

தேவையானவை


பூசணிக்காய் -1 கீத்து
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி, காய்ந்த திராட்ஷை - 10
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
  • பூசணிகாயை தோல் சீவி, நடுவில் உள்ள விதைப்பகுதியையும் எடுத்துவிட்டு துருவி வைக்கவும்.
  • அதை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
  • ஆறியவுடன் பூசணியைப்பிழிந்து தண்ணீர் தனியாகவும், பூசணித்துருவல் தனியாகவும் எடுக்கவும்.
  • முந்திரி, திராட்ஷையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
  • இப்போது பூசணித்துருவல் அளவிற்கு சர்க்கரை எடுத்து,(3/4 கப் பூசணித்துருவல் அதனால் 3/4 கப் சர்க்கரை) பிழிந்து வைத்த தண்ணீரில் கலந்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும், பூசணித்துருவலை கலந்து வேக விடவும்.
  • கொஞ்சம் நெய்சேர்த்து, ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்ஷை சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday, October 2, 2009

வெண்டைக்காய் புளி குழம்பு

தேவையானவை

வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
புளித்தண்ணீர் - 1/4 கப்
உப்பு
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய்ப்பால் -1/4 கப்
கடுகு
வெந்தயம்
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும்.
  • கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
  • நன்கு சுண்டியதும் இறக்கிவிடவும்.

பருப்பு சாதம், அல்லது வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

காய்கறி ரவா கிச்சடி

தேவையானவை


ரவை - 1 1/2 கப்
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை -சிறிது
புதினா - 1/4 கப்
கேரட் - 1
உருளைகிழங்கு - 1
காளிஃப்ளவர் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
(காய்களை சிறியதாக நறுக்கி வைக்கவும்)


அரைக்க

இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பட்டை - 1

தாளிக்க

கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
பிரியாணி இலை - சிறிது
கடல் பாசி - சிறிது




செய்முறை
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போடவும்.
  • பிறகு அதில் வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  • அதில் காய்கள், மஞ்சள்தூள் மற்றும் புதினா சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும், ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி விடவும்.
  • மூடி போட்டு சிறுதீயில் வைத்து 5 நிமிடம் வரை புளுங்க விடவும்.
எண்ணெய் கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் நல்லா இருக்கும்.
நெய் மற்றும் முந்திரி சேர்த்தால் ரிச்சாக இருக்கும்.
இதில் மசாலா பொருள்கள் சேர்க்காமலும் செய்யலாம். ஆனா என் பையனுக்கு பிரியாணி வகை உணவுகள் பிடிக்கும்கறதால நான் முடிஞ்ச வரைக்கும் மசாலா சேர்த்துருவேன்.

Wednesday, September 30, 2009

முளைப்பயிறு சுரைக்காய் கறி

தேவையானவை

முளைப்பயிறு - 2 கப்
(பாசிபயறும், தட்டைப்பயறும் கலந்து முளைக்கட்டியது)
சுரைக்காய் - 2 கப்
(சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு - சிறிது


செய்முறை
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் முளைப்பயிறு சேர்த்து, மிளகாய்த்தூள், சாம்பார்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
  • முளைப்பயிறு சீக்கிரம் வெந்து விடும். வேகவில்லை என்றால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

சத்தான, சுவையான கறி இது. சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டுக்கும் நன்றாக இருக்கும்.

பனீர் கபாப் (Paneer kabab)

தேவையானவை

பனீர் - 20 துண்டுகள்
குடமிளகாய் பச்சை - 20 துண்டுகள்
குடமிளகாய் சிவப்பு - 20 துண்டுகள்
காளான் - 20 துண்டுகள்
வெங்காயம் - 20 துண்டுகள்
(ஒரே மாதிரி சதுரமாக வெட்டி வைக்கவும்)


மசாலாவுக்கு

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
(நன்கு கலந்து வைக்கவும்)

செய்முறை
  • மசாலாவையும், வெட்டி வைத்த காய் மற்றும் பனீரையும் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் fridge ல் வைக்கவும்.
  • ஒவனை 375 க்கு முற்சூடு படுத்தவும்.
  • காய்களை ஒவ்வொன்றாக எடுத்து skewer ல்(தமிழ்ல என்னன்னு சொல்லுங்கப்பா) குத்தி வைக்கவும். 10 துண்டுகள் வரை ஒரு skewer ல் வைக்கலாம்.
  • ஒவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் வரை விட்டு எடுக்கவும்.

எண்ணெயே சேர்க்காத ஹெல்த்தி, சுலபமான மற்றும் சுவையான கபாப் ரெடி.

Monday, September 14, 2009

காய்கறி குருமா ( Vegetable Korma)

தேவையானவை:

கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - 1/4 கப்
பச்சை கொண்டைக்கடலை - 1/4 கப்
காளிஃப்ளவர் - 1/4 கப்
(பொடியாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்


தாளிக்க:
கடுகு
கிராம்பு - 2
ஏலக்காய் -1
கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2
பிரியாணி இலை - 2


அரைக்க:

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
பாதாம் - 4
மல்லி விதை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கடல்பாசி - சிறிது


செய்முறை:
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • அதில் நறுக்கி வைத்துள்ள காய்கள், தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மாசாலாத்தூள், உப்பு சேர்த்து, காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும்.
  • பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • மல்லித்தளை தூவி வைக்கவும்.
சப்பாத்தி , பரோட்டா, பூரி , தோசை அனைத்திற்கும் நல்லா இருக்கும்.

Thursday, September 3, 2009

முளைப்பயிறு(பாசிப்பயறு) பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்
முளைப்பயிறு - 2 கப்
வெங்காயம் - 1(நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கு ஏற்ப)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:
பிரியாணி இலை - சிறிது
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
மராட்டி மொக்கு - 3
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது


செய்முறை:


  • குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் + 1 டீஸ்பூன் நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
  • இதில் முளைப்பயிறு, பாஸ்மதி அரிசி சேர்த்து வதக்கி , உப்பும் சேர்த்து கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விசில் போடவும்.
  • 1 விசில் வந்த்ததும், தீயைக்குறைத்து 5 நிமிடம் விட்டு இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. brown basmathi அரிசியும் உபயோகிக்கலாம்.

Tuesday, September 1, 2009

சோயா மசாலா

தேவையானவை:


சோயா உருண்டைகள் - 50
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

தாளிக்க:

பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு
பிரியாணி இலை சிறிது
செய்முறை:
  • சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பிழிந்து எடுக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து, அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சோயா உருண்டை+ 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

  • மல்லித்தளை சேர்க்கவும்.
சப்பாத்தி, பூரி, புலாவ் உடன் சாப்பிடலாம்.சோயா புரோடீன் சத்து நிறைந்தது. டயட்டில் இருப்பவர்களும் சேர்த்து கொள்ளலாம். செய்வதும் சுலபம்.
நேத்து dinner சப்பாத்தி, சோயா மசாலா.

Related Posts with Thumbnails