Sunday, November 28, 2010

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவையானவை

சாதம் உதிரியாக - 2 கப்
பச்சை கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
கடுகு - சிறிது
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவைக்கு

அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லித்தளை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 அல்லது 8
புளி - சிறிது

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்.
அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த நீளக்கத்தரிக்காய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.(படம் google உதவி)

Wednesday, November 17, 2010

மோர்க்குழம்பு

இது காய் எதுவும் சேர்க்காமல் செய்யும் எளிமையான மோர்க்குழம்பு.

தேவையானவை
புளித்த மோர் - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
எண்ணெய்

அரைக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அத்துடன் புளித்த மோர் , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, November 3, 2010

ஒப்புட்டு (போளி)

இதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.

தேவையானவை
கடலைப்பருப்பு - 4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
அச்சு வெல்லம் - 10 பெரியது.
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை - சிறிது.

நல்லெண்ணெய்.


செய்முறை

  • மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)
  • கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.
  • தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.
  • பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
  • சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.
  • அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.


  • பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)

  • நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
  • தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.

சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.


நாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Tuesday, November 2, 2010

அதிரசம்(கச்சாயம்)


தேவையானவை

பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
  • அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
  • வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  • அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
  • மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
  • வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
  • இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
  • மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
  • 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.

Sunday, October 31, 2010

வெஜிடபிள் பீட்ஸா(Veggie Pizza)

என் பொண்ணுக்கு Schoolல 2 நாள் முன்னாடி பீட்ஸா craft பண்ணினாங்க. வீட்டுக்கு வந்ததும் இன்னிக்கு பீட்ஸா பண்ணனும், நாந்தான் ரோல் பண்ணி டாப்பிங் எல்லாம் போடுவேன்னு சொல்லிட்டா.
இது சுகந்தி & ஸ்ரீநிகா's Pizza.


தேவையானவை

பீட்ஸா பேஸ் செய்ய:

மைதா மாவு - 4 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
ட்ரை ஈஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

டாப்பிங்க்கு:
பீட்ஸா சாஸ்
மாஸரெல்லா சீஸ் - 1 பாக்கெட்
குடமிளகாய்
ஆலிவ்
ஹாலப்பினோ பெப்பர்
மஷ்ரூம்
வேற ஏதாவது காய் வேணும்னாலும் சேர்த்துக்கொள்ளலாம்.


செய்முறை
  • வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, உப்பு , ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
  • அதில் மைதா மாவு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு தளர்வாக இருக்க வேண்டும். 4 கப் மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
  • மாவு இருக்கும் பாத்திரத்தை clear wrap கொண்டு மூடி வைக்கவும்.
  • 2 மணி நேரத்தில் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.
  • அதை மறுபடியும் நன்றாக பிசைந்து, இரண்டாகப்பிரிக்கவும்.
  • ஒரு பகுதியை பிசைந்து சப்பாத்தி கட்டையில் பெரிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  • இது thin crust pizza. க்ரஸ்ட் திக்காக வேண்டுமென்றால் மாவும் திக்காக தேய்க்க வேண்டும்.
  • பீட்ஸா பானில்(pan) தேய்த்த மாவை வைத்து ஒரங்களை கையால் அழுத்தி விடவும்..
  • பீட்ஸா சாஸை தடவி அதன் மேல் வேண்டிய டாப்பிங்கை அடுக்கி, அதன்மேல் சீஸ் தூவி விடவும்.
  • 400 டிகிரி ஃபாரஹீட்டில் முற்சூடு செய்த அவனில் 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்யவும்.

இந்த அளவுக்கு 2 பீட்ஸா செய்யலாம். ஒரு வெஜ்ஜி பீட்ஸாவும் 1 ஆலிவ் பீட்ஸாவும் செய்தோம்.

Saturday, October 16, 2010

உருளைக்கிழங்கு வெண்டைக்காய் கறி

தேவையானவை


உருளைக்கிழங்கு - 2
வெண்டைக்காய் - 1/2 kg
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 சிறியது (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு


செய்முறை

  • உருளைகிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி பாதி வேக வைக்கவும்.
  • வெண்டைக்காயை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, சிறுதீயில் வைத்து நன்கு வதக்கி எடுக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  • அதில் தக்காளி சேர்த்து வதக்கி, வெண்டைக்காயை சேர்த்து மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்.
  • கடைசியாக நிலக்கடலையை பொடித்து தூவி இறக்கவும்.

சப்பாத்தியுடன் சாப்பிட நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.

Wednesday, October 13, 2010

கோதுமை அல்வா



தேவையானவை

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்
நெய் - 1 கப்
கனோலா எண்ணெய் - 1 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 15

செய்முறை
  • மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
    எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.
  • எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.


எப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.


மைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.
மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா எதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்.

Tuesday, September 21, 2010

கடலை உருண்டை


தேவையானவை:

நிலக்கடலை - 2 கப்
வெல்லம் - 3/4 கப் (துருவியது)
நெய் - சிறிது

செய்முறை
  • நிலக்கடலையை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
  • அதில் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு 4 அல்லது 5 முறை pulse பண்ணவும்.(நான் முழுசா தோல் நீக்க மாட்டேன், பாதி தோல் இருக்கற மாதிரி செய்வேன்)
  • ஒரளவு பறு பறுப்பாக இருக்க வேண்டும்.
  • அத்துடன் வெல்லத்துருவலை சேர்த்து மறுபடியும் ஒரு முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • இதை சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.

சத்தான கடலை உருண்டை ரெடி. என் கணவருக்கும், பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தது இது.

அதிகமாக நெய் சேர்க்கவேண்டியதில்லை. உருண்டை பிடிக்கும் போது கைகளில் தடவிக்கொண்டால் போதும்.

இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்ல அளவை சரி செய்து கொள்ளலாம்.

கடலை வறுக்க(நிஜமாவே நிலக்கடலைதாங்க, வேற எதுவும் இல்ல) சுலபமான முறை அவனில் வைத்து எடுக்கலாம்

300F ல் 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும்.

சீக்கிரமா செய்ய வேண்டுமானால் microwave லும் செய்யலாம். microwave ல் 2 நிமிடம் வைத்து 3 நிமிடம் standing time கொடுத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.

Wednesday, September 15, 2010

கோதுமை(Multi Grain) ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு அல்லது multi grain மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1/2
குடமிளகாய் - 1/2
கீரை - 1 கைப்பிடி
முட்டைகோஸ் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தளை - சிறிது
(அனைத்தையும் பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், காய்களை வதக்கி வைக்கவும்.
  • மாவுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, வதக்கி வைத்தவற்றையும் சேர்த்து , சிறிது சிறிதாக சுடு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  • சப்பாத்தி மாவை விட நன்கு தளர பிசைய வேண்டும்.
  • சப்பாத்தி கல்லை காய வைத்து, ஒரு உருண்டை மாவை எடுத்து கல்லில் வைத்து கையால் அழுத்தி ரொட்டி போல் செய்ய வேண்டும்.
  • இடை இடையே தண்ணீர் தொட்டு செய்தால் கையை சுடாமல் செய்யலாம்.
  • அல்லது ஒரு sheet ல் மாவை வைத்து ரொட்டியாக தட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டு எடுக்கலாம்.

இதில் கேரட்டும் துருவி சேர்க்கலாம்.

நான் sujatha brand multi grain flour உபயோகித்தேன். கோதுமை அல்லது ராகி மாவிலும் செய்யலாம்.

Friday, August 20, 2010

பூண்டு குழம்பு

தேவையானவை:


வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து , நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும். செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தூம் செய்யலாம்.

Wednesday, August 18, 2010

புரோட்டின் அடை

இங்கே பக்கத்துல இருக்கற farmers market ல 10 பீன்ஸ் சூப் மிக்ஸ் வெச்சுருந்தாங்க. இதுல பார்லி, பட்டாணி பருப்பு(பச்சை, மஞ்சள்), black beans, white beans, மசூர் பருப்பு, pinto beans, ராஜ்மா, red lentils எல்லாம் இருக்கு. அரிசி இல்லாம பார்லியோட நிறைய பருப்புங்கறதால சரி அடை செய்யலாமேன்னு முயற்சி பண்ணினேன். நல்லாவே வந்தது.

தேவையானவை:

10 பீன்ஸ் சூப் மிக்ஸ் - 2 கப்
வரமிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

செய்முறை:

  • பீன்ஸ் மிக்ஸை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரைக்கும் போது வர மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
  • பிறகு தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

தக்காளி சட்னி , கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். சட்னி இல்லாமல் சாப்பிடவும் நல்லா இருந்தது.

Monday, August 9, 2010

சந்தகை & தேங்காய்ப்பால்

சந்தகை கொங்கு பகுதியில் பிரபலமான உணவு. அதிலும் புதுசா கல்யாணமான பொண்ணு மாப்பிள்ளை விருந்துக்கு சந்தகைதான் செய்வாங்க.
சந்தகை செய்யறது ஒரு பெரிய வேலை!. முடிஞ்ச வரைக்கும் frozen வாங்கிருவேன். ஆனா எப்போவாவது வீட்லயே செய்யறதும் உண்டு.

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 4 கப்

செய்முறை

  • புழுங்கல் அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, கழுவி நைசாக அரைத்து எடுக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.(கொழுக்கட்டை பதம்).

  • வறுத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேக வைக்கவும். (அல்லது மாவை வறுக்காமல் இட்லியாக செய்தும் சந்தகை செய்யலாம்.)
  • கொழுக்கட்டை சூடாக இருக்கும் போதே

சந்தகை மரத்தில் வைத்து பிழிந்து எடுக்கவும்.(கொழுக்கட்டை சூடு ஆறிவிட்டால் பிழிய வராது)

இதில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்ப்பால் செய்ய:

தேவையானவை

தேங்காய்- 1

ஏலக்காய் - 4

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

  • தேங்காயை துருவி, ஏலக்காய் , தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் அரைத்து பிழிந்து பால் எடுக்கவும். (2 முறை செய்யலாம்.)
  • அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். நன்கு கலந்து விடவும்.
  • சர்க்கரை கரைந்து, லேசாக சூடு ஆகியதும் இறக்கி விடவும்.
  • கொதிக்க விடக்கூடாது.

தக்காளி சந்தகை, புளி சந்தகை அல்லது தயிர் சந்தகையும் செய்து சாப்பிடலாம்.

Friday, July 30, 2010

கம்மஞ்சோறு & கம்மங்கூழ்

தேவையானவை
கம்பு - 2 கப்


செய்முறை
  • 2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
  • நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.

கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.


இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.


அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.

Wednesday, July 14, 2010

மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை


மாம்பழம் - 2
பால் - 1 கப்
வென்னிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
  • மாம்பழத்தை தோல் சீவி நறுக்கவும்.
  • அனைத்தையும் ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
மாம்பழக்கூழும் சேர்த்து செய்யலாம்.

Tuesday, July 6, 2010

தக்காளி சாதம்

தேவையானவை

சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு

அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை

  • சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
  • இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

இந்த மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் உபயோகிக்கலாம்.

Wednesday, June 23, 2010

மாங்காய் ஊறுகாய் - II

இது என் ஆந்திரா தோழி ஒருவருடைய ரெசிபி!.

தேவையானவை
மாங்காய் (பெரியது)- 2
உப்பு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - 3கப்.

செய்முறை

  • மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். (மாங்காய் கொட்டையின் மேல் உள்ள கடினமான பகுதியும் சேர்ந்து வருமாறு நறுக்கவும்)
  • இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.(நான் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்தேன்)
  • எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடாயி எண்ணெயை சூடாக்கி , பிறகு ஆற வைத்து சேர்க்கவும்.
  • ஒரு வாரம் ஊறிய பிறகு உபயோகிக்கலாம்.

இஞ்சி பூண்டு சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருக்கும்.

கொள்ளு ரசம்

தேவையானவை

கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லித்தளை
பூண்டு - 3 பல் (நன்றாக தட்டி வைக்கவும்)(crushed)
கடுகு

பொடிக்க
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
(நன்கு பொடிக்கவும்) அம்மியில் பொடித்தால் நல்லா இருக்கும். நான் சின்ன கல்லில் பொடிப்பேன். மிக்ஸியும் உபயோகிக்கலாம்.


செய்முறை

  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கடைசியாக மல்லித்தளை சேர்க்கவும்.
இதை சூப் போல அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் சாப்பிடலாம்.

தட்டைபயறு, பாசிப்பயறு வேக வைத்த தண்ணீரிலும் இதே போல் ரசம் செய்யலாம்.

கொள்ளு பொடி

இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளுப்பொடி.

தேவையானவை

கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 -8 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4(நறுக்கியது)
கறிவேப்பிலை
பூண்டு - 1 பல்லு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
உப்பு

செய்முறை

  • கொள்ளை சுத்தம் செய்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 6 விசில் விடவும்.
  • பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு (ரசத்துக்கு உபயோகிக்கலாம்) கொள்ளை உலர விடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு மல்லி, சீரகம் தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
  • வதக்கி எடுத்தவற்றுடன் உலர வைத்த கொள்ளு மற்றும் மீதி உள்ள சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.

சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பச்சை வெங்காயம் சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும். நான் அதிக நேரம் உலர வைக்காம செஞ்சுட்டேன் இல்லேன்னா இன்னும் உதிரியாக வரும்.

என் சிறுவயதில் கொள்ளுப்பொடி செய்யும் போது மிக்ஸியில் அரைக்க மாட்டாங்க. உரலில் இடித்து எடுப்பாங்க. இப்ப நிறைய பேருக்கு உரல் எப்படி இருக்கும்னே தெரியாது.

ஒரு சின்ன சோகம் இதுல, கொள்ளு US ல கிடைக்கறதில்ல. இனி இந்தியா போயிட்டு வரப்ப இதையும் கொண்டு வரணும்.

Monday, June 21, 2010

கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி

தேவையானவை


கத்தரிக்காய் - 3
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சிறு தீயில் நன்கு வேக விட்டு, தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Saturday, June 19, 2010

முட்டை டோஸ்ட்(Spicy French Toast)

தேவையானவை

ரொட்டி துண்டுகள் - 4
முட்டை - 2
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது( பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்

செய்முறை
  • முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.
  • வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை,மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் கலக்கவும்.

  • நான் ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  • ரொட்டியை, முட்டை கலவையில் முக்கி எடுத்து வெங்காயம் கலவை இரு புறமும் படியுமாறு, எடுத்து தோசைக்கல்லில் போடவும்.
  • சிறு தீயில்2 நிமிடம் வேக விட்டு திருப்பி போட்டு மறுபடியும் 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.

காலைஉணவுக்கு ஏற்ற சத்தான ஈசியான உணவு.

Thursday, June 17, 2010

டொமாட்டிலோ(Tomatillo/ Husk tomato) பருப்பு

டொமாட்டிலோ அல்லது ஹஸ்க் டொமாட்டோ, பார்ப்பதற்க்கு பச்சை தக்காளி போலவே இருக்கும், ஆனால் அதன் மேல் ஒரு லேயர் இருக்கும். இது தென் அமெரிக்க சமையலில் நிறைய உபயோகப்படுத்தப்படும். புளிப்பு சுவையுடன் இருக்கும். இதில பருப்பு மாதிரி ட்ரை பண்ணினேன். மாங்காய் போட்ட சாம்பார் மாதிரி நல்லாவே இருந்தது.
தேவையானவை

துவரம் பருப்பு - 1/2 கப்
டொமாட்டிலோ - 3
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
  • கொதித்தவுடன் அதில் பருப்பு சேர்த்து வேக விடவும்.
  • டொமாட்டிலோவின் மேல் லேயரை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • பருப்பு முக்கால் பதம் வெந்ததும் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் டொமாட்டிலோவை சேர்த்து வேக விடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைக்கவும்.
  • பருப்பும் டொமாட்டிலோவும் நன்கு வெந்ததும் அதில் கடாயில் உள்ளவற்றை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • பிறகு அதை எடுத்து கடைந்து வைக்கவும்.

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருந்தது.

Wednesday, June 16, 2010

பிரவுன் அவல் உப்புமா (Brown poha uppuma)


தேவையானவை
பிரவுன் அவல்(மட்டை அரிசி அவல்) - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கிய
து)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 சிறுதுண்டு(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நான் அவசரத்துல போட மறந்துட்டேன்)
கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் அவல் எடுத்து, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.(15 நிமிடங்கள்)
  • அது ஊறும் நேரத்தில் வெங்காயம், மிளகாய், தக்காளி நறுக்கி வைக்கலாம்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அது வதங்கும் நேரத்தில் அவலை தண்ணீர் போக நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடாயில் அவல் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலக்கவும்.

20 நிமிசத்துல செஞ்சரலாம். காலை நேர உணவுக்கு சீக்கிரமாகவும், சத்தாணதாகவும் சாப்பிடலாம். இதில் குட

மிளகாயும் சேர்க்கலாம்.


Sending this to Healthy recipe Hunt @ kurinjikathambam

பீட்ரூட் இலை சாம்பார்

பீட்ரூட் இலையில் அதிக ஆளவு இரும்புச்சத்து உள்ளது. அத்துடன் calcium, magnesium, copper, phosphorus, sodium ஆகியவையும் உள்ளது.

(Thanks to google)
தேவையானவை:

துவரம் பருப்பு - 1 கப்
பீட்ரூட் இலை - 1 கட்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது

செய்முறை
  • பூண்டு சேர்த்து பருப்பை வேகவைக்கவும். குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் பருப்பு கரையாமல் இருக்கும்.
  • பீட்ரூட் இலையை பொடியாக நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதில் பீட்ரூட் இலை, மிளகாய்த்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Tuesday, June 15, 2010

பிரவுன் அரிசி, பிரவுன் அவல் தோசை & கார சட்னி

தேவையானவை
பிரவுன் அரிசி(brown long grain rice) - 4 கப்
உளுந்து - 1/4 கப்
பிரவுன் அவல் - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை
  • அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவலை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
  • தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

தோசை ஸ்பான்ஞ் மாதிரி மிருதுவாக இருக்கும்.கார சட்னியுடன் சாப்பிட நல்லா இருக்கும். இதில் அவல் சேர்க்காமல் செய்தால் நல்ல க்ரிஸ்பியாக வரும்.

ஈசி கார சட்னி

வெங்காயம் - 1

தக்காளி - 1

மல்லித்தளை - 1/4 கட்டு

வரமிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

புளி சிறிது

உப்பு

அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து, சிறிது நல்லெண்ணெய் தாளித்து கொட்டவும்.

Friday, June 11, 2010

ஸ்ட்ராபெர்ரி/பாதாம்/வாழைப்பழ ஸ்மூத்தி(strawberry/ almond/ Banana Smoothie)

தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி - 10
வாழைப்பழம் - 1
சோயா பால் - 1 கப்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 4

செய்முறை

  • மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, ஊற வைத்த பாதாம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அதில் சோயாபால் மற்றும் தேன் சேர்த்து அரைக்கவும்.
  • healthy smoothie is ready.

Saturday, June 5, 2010

புதுமனை புகுவிழா

ஒரு மாசமா ப்ளாக் பக்கம் வர முடியாத அளவுக்கு வேலை. அன்பா விசாரிச்சவங்களுக்கு ரொம்ப நன்றி!!!.


இப்படி ஆரம்பிச்சதுதான்.

இது ஒருவாரத்திற்கு அப்புறம்


இது ஒரு மாசத்துக்கு அப்புறம்.


மூணு மாசத்துல இப்படி கட்டி முடிச்சுட்டாங்க.

பூஜை வெள்ளிக்கிழமை நல்ல படியா நடந்தது.

இது நம்ம சமையல் சாம்ராஜ்யம்!!!!!! பால் பொங்கியாச்சு. அடுத்த வாரம் புது வீட்டுக்கு போயிருவோம். அதுக்கப்பறம் பதிவுகள் தொடரும்.

Related Posts with Thumbnails